சாலை விபத்தில் பெண் பலி
மணலி: மீஞ்சூர், பிரபு நகரைச் சேர்ந்தவர் அஞ்சலை, 42; சி.பி.சி.எல்., நிறுவனத்தில், ஒப்பந்த அடிப்படையில், 'ஹவுஸ் கீப்பிங்' வேலை செய்தார். இதே நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாக வேலை பார்ப்பவர் நிர்மல், 43.நேற்று மாலை பணி முடிந்து, இருவரும் நிர்மலின், 'ஹோண்டா சைன்' ரக 'பைக்'கில் வீட்டிற்கு சென்றனர். பொன்னேரி நெடுஞ்சாலை - வைக்காடு சந்திப்பு அருகே சென்றபோது, பக்கவாட்டில் வந்த, முழுமை பெறாத 'சேஸ்' கனரக வாகனம் மோதியதில், பைக் நிலைதடுமாறியது.இதில், 'பைக்' பின்னால் அமர்ந்திருந்த அஞ்சலை கீழே விழுந்து, தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.நிர்மலுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தோர் அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர். சேஸ் வாகன ஓட்டுனர் தப்பியோடினார். செங்குன்றம் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.