ஆவின் ஐஸ்கிரீமை ருசிப்பதில் போட்டா போட்டி
மாதவரம்: ஆவின் நிறுவனம் நடத்திய போட்டியில், கல்லுாரி மாணவ - மாணவியர், ஆவின் ஐஸ்கிரீமை போட்டி போட்டு ருசித்தனர். ஆவின் நிறுவனம் துவக்கப்பட்ட பிப்., 1, ஆவின் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, பிப்ரவரி மாதம் முழுதும், பல்வேறு நிகழ்ச்சிகளை ஆவின் நிறுவனம் நடத்தி வருகிறது. மாதவரத்தில் உள்ள ஆவின் பாலகத்தில் நேற்று, கல்லுாரி மாணவ - மாணவியருக்கான ஐஸ்கிரீம் ருசிக்கும் போட்டி நடந்தது. இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர், ஆவின் ஐஸ்கிரீமை போட்டி போட்டு ருசித்தனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை, சென்னை ரோட்டரி கிளப் உதவியுடன், மகளிருக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. முகாமில், மார்பக புற்றுநோய், கருப்பை வாய் பரிசோதனை மற்றும் பல் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 12 பேர் கொண்ட மருத்துவ குழுவினர், 55க்கும் மேற்பட்ட மகளிருக்கு பரிசோதனைகளை செய்தனர். நிகழ்வில், ஆவின் இணை நிர்வாக இயக்குநர் கவிதா, விற்பனை உதவி பொது மேலாளர் தியாகராஜன் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் பலர் பங்கேற்றனர்.