உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தெருநாய்களுக்கு பொது இடத்தில் உணவளித்தோர் மீது நடவடிக்கை

தெருநாய்களுக்கு பொது இடத்தில் உணவளித்தோர் மீது நடவடிக்கை

சென்னை, உச்சநீதிமன்ற உத்தரவை மீறி, தெருநாய்களுக்கு உணவு அளித்தவர்கள் மீது, நடவடிக்கை துவங்கியுள்ளது. கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் முரளிதரன், 56. அவர், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அளித்த புகார்: உச்சநீதிமன்ற தடையை மீறி, கோட்டூர்புரம் ஏரிக்கரை பகுதியில் சிலர், இருசக்கர வாகனத்தில் வந்து, தெரு நாய்களுக்கு உணவு அளித்து வருகின்றனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் நீதிமன்றத்தை நாடுவேன். இவ்வாறு புகாரில் கூறியிருந்தார். தெரு நாய்களுக்கு உணவு அளித்தது யார் என்பது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். 1913ல் புகார் தரலாம் இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் தெருநாய்கள் தொல்லை, நாய்களின் ஆக்ரோஷமான செயல்பாடுகள் இருந்தால், மாநகராட்சியின் 1913 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். புகாரின் அடிப்படையில், மாநகராட்சி கால்நடை பணியாளர்கள், அப்பகுதி தெருநாய்களை பிடித்து, 'ரேபீஸ்' தடுப்பூசி செலுத்துவதுடன், கருத்தடை செய்து வருகின்றனர். அதேநேரம், மாநகராட்சியில் பல இடங்களில் தெருநாய்களுக்கு, சிலர் உணவு அளித்து வருகின்றனர். அவ்வாறு உணவு அளிப்பதை விட, அவர்கள் அந்நாய்களை தத்தெடுத்து வளர்க்கலாம். மக்கள் நிறைந்த பகுதிகளில் மட்டுமே தெருநாய்களுக்கு உணவு அளிக்க கூடாது என, நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோட்டூர்புரத்தில் அளிக்கப்பட்ட புகாரில் போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுப்பர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை