தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
பல்லாவரம், தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து, கீழ்கட்டளையில் அ.தி.மு.க.,வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், பல்லாவரம் சட்டசபை தொகுதியான கீழ்கட்டளை பகுதி அ.தி.மு.க., சார்பில் தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து, நேற்று கீழ்கட்டளையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 'தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 2ல் உள்ள கீழ்கட்டளை பெரிய ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும். கீழ்கட்டளையில் குப்பை கழிவுகளை, தினமும் அகற்ற வேண்டும், தெரு நாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும், பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்' என்பது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில், அ.தி.மு.க., அமைப்புச் செயலர் டி.ஜெயகுமார் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலர் ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலர் தன்சிங் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.