மேலும் செய்திகள்
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கண்காட்சி
08-Oct-2025
சென்னை: ஆண்டுதோறும் அக்டோபர் மாதம், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில், சென்னை அப்பல்லோ புற்றுநோய் மையம் மற்றும் அப்பல்லோ ஊட்டச்சத்து மையம் சார்பில், மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில், பெண்களுக்கு மிகவும் பிடித்த சாக்லெட் கொண்டு, மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும், 'செக் - ஓலேட்' எனும் விழிப்புணர்வு திட்டம் துவங்கப்பட்டது. இதுகுறித்து, அப்பல்லோ மருத்துவமனை புற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் ரத்னா தேவி, மதுபிரியா, மஞ்சுளா ராவ், ஆஷாரெட்டி ஆகியோர் அளித்த பேட்டி: இந்தியாவில் கண்டறியப்படும் புற்றுநோய் பாதிப்புகளில், மார்பக புற்றுநோய், 13.5 சதவீதமாக உள்ளது. புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளில், 10.6 சதவீதம் மார்பக புற்றுநோயால் ஏற்படுகின்றன. மார்பக புற்றுநோய் பாதிப்பு உள்ளோரில், 10 முதல் 15 சதவீதம் பேருக்கு, மரபணு வழியால் தாக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, 18 வயதுக்கு மேற்பட்ட இளம் பெண்கள், தங்கள் மார்பகம் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்; சுய மார்பக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும், 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ஆண்டுக்கு ஒருமுறை, மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்வது அவசியம். ஆரம்ப காலத்திலேயே மார்பக புற்றுநோயை கண்டறிந்தால், கீமோதெரபி சிகிச்சை இன்றி காக்க முடியும். 'டாட்டூ' போட்டுக் கொள்வதால், புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
08-Oct-2025