சவாரி ஏற்றுவதில் தகராறு ஆட்டோ டிரைவர்கள் மோதல்
கொடுங்கையூர்:வியாசர்பாடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்களான ஆதி, 18, சுந்தர், 24, பார்த்திபன், 24, செங்குன்றத்தைச் சேர்ந்தவர் சரண்ராஜ், 24, சஞ்சய்குமார், 26, ஆகியோர், மூலக்கடையில் இருந்து பெரம்பூர் ரயில் நிலையம் வரை ஆட்டோ ஓட்டி வருகின்றனர்.அதே ரூட்டில், ஆட்டோ ஓட்டுனர்களான கொடுங்கையூரைச் சேர்ந்த கார்த்திக், 24, செல்வசாலமன், 23, ஹரிஹரன், 20, மாதவரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், 21, ஆகியோர் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். இவர்களுக்குள் ஆட்களை ஏற்றுவதில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.நேற்று முன்தினம் நள்ளிரவு, வியாசர்பாடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஆதியை, மற்றொரு கும்பலைச் சேர்ந்த ஹரிஹரன், கார்த்தி ஆகியோர் தாக்கி உள்ளனர்.அதற்கு பழி வாங்குவதற்காக, ஆதி அவரது அண்ணன் சஞ்சய் என்பவரிடம் கூறியதால், அவர் அவரது கூட்டாளிகளுடன் ஹரிஹரன், கார்த்தியை வெட்டுவதற்காக, மூலக்கடை ஜங்ஷனில் கத்தியுடன் நேற்று சுற்றி திரிந்தனர்.இதை பார்த்த பொதுமக்கள், கொடுங்கையூர் போலீசில் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கத்தியுடன் சுற்றி திரிந்த கார்த்தி, ஹரிகரன் மற்றும் சஞ்சய்குமார், சரண்ராஜ் ஆகியோரை பிடித்து விசாரிக்கின்றனர்.