சென்னை, சென்னையில், 'சைபர் சொசைட்டி ஆப் இந்தியா' எனும், என்.ஜி.ஓ., நிறுவனம் செயல்படுகிறது. இதன் சார்பில், மாநில 'சைபர் கிரைம்' பிரிவுடன் இணைந்து, பலமுறை கருத்தரங்குகள் நடத்தப்பட்டு உள்ளன.அந்த வகையில், வரும் பிப்., 3ம் தேதி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், நுால் வெளியீடு அரங்கில், 'வங்கி கணக்குகள் முடக்கமும் சைபர் கிரைம் குற்றங்களும்' எனும் தலைப்பில், தேசிய அளவிலான ஒருநாள் கருத்தரங்கு நடைபெற உள்ளது.இதில் நேரடியாகவும், 'ஆன்லைன்' வாயிலாகவும் பங்கேற்கலாம்.சிறப்பு விருந்தினராக, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பங்கேற்கிறார்.'சைபர் கிரைம்' தொடர்பான பல்வேறு தலைப்புகளில், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் தியாகராஜன், மும்பை வழக்கறிஞர் விக்கி ஷா, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அஜய் சிங் ஆகியோர் பேசுகின்றனர்.அதேபோல, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ரங்கநாத் மைசூர், ரிசர்வ் வங்கி ஓய்வுபெற்ற பொதுமேலாளர் ஹரிகிருஷ்ணன், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாசுதேவன் ஆகியோரும் உரையாற்றுகின்றனர்.'டிஜிட்டல் லைப் கோச்சிங்' எனும் தலைப்பில், சென்னையைச் சேர்ந்த வல்லுனர் வினோத்குமார், 'சைபர் கிரைம்' குற்றங்களை விசாரிப்பதில் மிகவும் திறமை வாய்ந்த, உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி திரிவேணி சிங், சென்னை சைபர் கிரைம் பிரிவு டி.எஸ்.பி., இலக்கியா ஆகியோரும் பேசுகின்றனர்.தேசிய அளவிலான கருத்தரங்கிற்கு, 'சைபர் சொசைட்டி ஆப் இந்தியா'வின் தலைவர் விஜயகுமார், ஓய்வுபெற்ற உயர் போலீஸ் அதிகாரியும், செயலருமான பாலு சுவாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.இதில் நேரடியாகவும்,'ஆன்லைன்' வாயிலாகவும் பங்கேற்க, https://cysi.in/workshop-on-freezing-bank-accounts-in-cybercrimes/ எனும் இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.