பெண்களிடம் நகை, போன் ஆட்டை காதலன் கைது: தோழிக்கு வலை
வேளச்சேரி:சிங்கபெருமாள் கோவில், ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்த பானுமதி, 31, குழந்தை தெரசா, 27. இருவரும், தனியார் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். இவர்களின் தோழி ஸ்டெல்லா.இவருக்கும், ஈரோட்டை சேர்ந்த ஜெகதீஸ், 47, என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும், ஸ்ரீவாரிநகரில் உள்ள வீட்டில் அடிக்கடி தங்கி உள்ளனர்.இந்நிலையில், ஜெகதீஸ், ஸ்டெல்லா ஆகியோர் சேர்ந்து, தீபாவளிக்கு துணி எடுத்து தருவதாக கூறி, பானுமதி, குழந்தை தெரசாவை வேளச்சேரிக்கு அழைத்துச் சென்றனர். அங்குள்ள மாலில், துணி தேர்வு செய்து கொண்டிருந்த குழந்தை தெரசாவின் மொபைல் போனை வாங்கி, அவர்கள் வெளியேறினர்.அதேநேரத்தில், பானுமதியை, அருகில் உள்ள ஒரு மேக்கப் சலுானில் அழைத்து சென்று, நகை அணியக்கூடாது எனக்கூறி, அவர் அணிந்திருந்த 4 சவரன் நகையை வாங்கி வைத்தனர்.துணி தேர்வு, மேக்கப் போட்டுவிட்டு வெளியே வந்து தேடியபோது, ஸ்டெல்லா, ஜெகதீஸ் ஆகியோர் மாயமாகினர். மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்து, நகை, போனுடன் இருவரும் தப்பியது தெரிந்தது.இதுகுறித்து, வேளச்சேரி போலீசில் புகார் அளித்தனர். நேற்று, ஈரோட்டில் வைத்து, ஜெகதீசை கைது செய்த போலீசார், நகையை மீட்டனர். ஸ்டெல்லா குறித்து விசாரிக்கின்றனர்.