பஸ் மேல் ரகளை செய்த 15 மாணவர்கள் மீது வழக்கு
வியாசர்பாடி, செங்குன்றத்தில் இருந்து காரனோடை நோக்கி, தடம் எண் '57எச்' பேருந்து, நேற்று முன்தினம் காலை சென்றது. இந்த பேருந்து வியாசர்பாடி மேம்பாலம் வழியாக செல்லும்போது, அதில் இருந்த கல்லுாரி மாணவர்கள் 10க்கும் மேற்பட்டோர் பேருந்தின் மேல் ஏறி, கத்தி கூச்சலிட்டு ரகளை செய்தனர்.அதிர்ச்சியடைந்த ஓட்டுனர் பேருந்தை நிறுத்தினார். ஆனால் மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்க மறுத்து, தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டனர்.நீண்ட நேரத்துக்கு பின், மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கியதும் மீண்டும் பேருந்து புறப்பட்டு சென்றது. இச்சம்பவத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பயணியர் கடும் அவதியடைந்தனர்.இது குறித்து, வியாசர்பாடி போலீசாரின் விசாரணையில் பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது.இது தொடர்பாக 15 மாணவர்கள் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து, அவர்களை தேடி வருகின்றனர்.