சென்னை : சென்னை தினத்தை முன்னிட்டு, நகரின் பல இடங்களில் அதன் சிறப்புகள்
குறித்து, மக்கள் அறிந்து கொள்வதற்காக, பல்வேறு சிறப்பு கண்காட்சிகள்
நேற்று நடத்தப்பட்டன.சென்னை நகரம் அமைக்கப்பட்டு நேற்றுடன், 372 ஆண்டுகள்
நிறைவுபெற்றன. ஆக., 22ம் தேதி ஒவ்வொரு ஆண்டும், சென்னை தினமாக
கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னை அரசு அருங்காட்சியகத்தில்,
'சென்னையின் பண்பாட்டு காலடிச் சுவடுகள்' என்ற தலைப்பில் சிறப்பு கண்காட்சி
நடத்தப்பட்டது.இதில், அந்த கால மர சிற்பங்கள், முதன்முதலில் பயன்படுத்திய
டிரான்ஸ் மீட்டர், பழங்கால எடை அளவைகள், நாணயங்கள், எம்டன் கப்பலின்
வரலாறு, சென்னையின் அரிய புகைப்படங்கள் ஆகியவை காட்சிக்கு
வைக்கப்பட்டிருந்தன. மேலும், சென்னையின் வரலாற்றை பற்றி மாற்றுதிறனாளிகள்
தெரிந்து கொள்வதற்காக, பிரெய்லி முறையில் தகவல்களை தெரிவிக்க, சிறப்பு
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்நிகழ்ச்சியில், சுற்றுலா மற்றும்
பண்பாட்டுத்துறையின் முதன்மை செயலர் ஜெயக்கொடி துவக்கி வைத்தார். 'சென்னை
அருங்காட்சியகத்தை உருவாக்கிய பெருமக்கள்' என்ற தலைப்பில் குறு, சிறு
மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் துறையின் செயலர் ஸ்ரீதர்,
அருங்காட்சியகத்தின் வரலாறு குறித்து பேசினார். இந்த கண்காட்சி நேற்று
(22ம் தேதி) தொடங்கி, 24ம் தேதி (நாளை) வரை நடக்கவுள்ளது.பழமையின்
காதலர்கள்: கே.கே.நகரில் உள்ள பத்மஷேசாத்ரி பள்ளியில் சென்னை தினம்
கொண்டாடப்பட்டது. இதில் 'பழமையின் காதலர்கள்' என்ற அமைப்பின் சார்பாக,
பழம்பெரும் பொருட்களின் கண்காட்சி நடந்தது. இதில் பழங்கால நாணயங்கள்,
கல்வெட்டுகள், உடைகள், ஆபரணங்கள், புகைப்படங்கள், ஓவியங்கள், போன்றவை
அடங்கிய கண்காட்சி நடந்தது.இதில், சென்னை வரலாற்று ஆய்வாளர் முத்தையா தலைமை
தாங்கி, கண்காட்சியை திறந்து வைத்தார். அஞ்சல் துறை தமிழக வட்டத் தலைவர்
ராமானுஜம் சென்னையின் சிறப்பும், சென்னையின் பழமையை பாதுகாக்க வேண்டிய
அவசியம் குறித்தும் பேசினார். இவ்விழாவில் பள்ளி மாணவர்களும், ஏராளமான
ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். இக்கண்காட்சி இன்னும் இரண்டு நாட்கள்
நடைபெறும்