உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முதல்வர் கோப்பை மகளிர் கிரிக்கெட் குருநானக் கல்லுாரி அணிகள் அசத்தல்

முதல்வர் கோப்பை மகளிர் கிரிக்கெட் குருநானக் கல்லுாரி அணிகள் அசத்தல்

சென்னை:சென்னை மாவட்ட கல்லுாரிகளுக்கு இடையிலான முதல்வர் கோப்பை கிரிக்கெட் போட்டியில், வேளச்சேரி குருநானக் கல்லுாரி மகளிர் அணிகள், இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இதில், 'ஏ' அணி கோப்பையை வென்றது. தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக முதல்வர் கோப்பை போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் நடப்பாண்டு, சென்னை மாவட்ட கல்லுாரிகள் இடையிலான மகளிர் கிரிக்கெட் போட்டிகள், நகரில் உள்ள பல மைதானங்களில் நடந்தன. இவற்றில், வேளச்சேரி குருநானக் கல்லுாரி சார்பில் களம் கண்ட 'ஏ, பி' ஆகிய இரு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. முதலாவது அரையிறுதியில், குருநானக் கல்லுாரி 'ஏ' அணி வீராங்கனையர், எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லுாரி அணியை தோற்கடித்தனர். இரண்டாவது அரையிறுதியில், குருநானக் கல்லுாரி 'பி' அணி வீராங்கனையர், சென்னை கிறிஸ்துவ கல்லுாரி அணியை வீழ்த்தினர். இறுதிப் போட்டி, அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில், குருநானக் கல்லுாரியின் 'ஏ, பி' அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் களமிறங்கிய குருநானக் கல்லுாரி 'ஏ' அணி வீராங்கனையர் அதிரடியாக விளையாடி, நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில், மூன்று விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் குவித்தனர். திவ்யா 32 பந்துகளில், ஆறு பவுண்டரி உட்பட 45 ரன்கள் விளாசினார். அடுத்து களமிறங்கிய குருநானக் கல்லுாரி 'பி' அணியினர், விக்கெட்டுகளை பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்தி, ரன் குவிப்பில் கோட்டை விட்டனர். இதனால், 10 ஓவர்கள் முடிவில், ஐந்து விக்கெட் இழப்பிற்கு, 22 ரன்கள் மட்டும் எடுக்க, குருநானக் கல்லுாரி 'ஏ' அணி வீராங்கனையர், 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, கோப்பையை கைப்பற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை