சூடான தார் ஒட்டியதில் குழந்தை காயம்
சென்னை:மின் வாரிய பணிக்காக, பள்ளத்தில் கொட்டிய சூடான தார் ஒட்டியதில், மூன்று வயது பெண் குழந்தை காயமடைந்தார். பட்டினம்பாக்கம், நம்பிக்கை நகர் பகுதியைச் சேர்ந்த இம்மானுவேல் ஜோஸ்வா - பிபியானா தம்பதிக்கு, மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம், வீட்டின் வெளியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, திடீரென அழுதது. தாய் பிபியானா பார்த்தபோது, குழந்தையின் வலது கால் மற்றும் கை விரல்கள், இடது கால் தொடைக்கு கீழ் பகுதியில், சூடான தார் ஒட்டியிருந்தது. சூடு தாங்க முடியாமல் துடித்த குழந்தையை மீட்டு, ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. விசாரணையில், அப்பகுதியில் உள்ள தனியார் உணவகத்திற்கு மின் வாரியம் பள்ளம் தோண்டி மின் இணைப்பு கொடுத்தாக தெரிகிறது. பணிக்காக தோண்டிய பள்ளத்தை முறையாக மூடாததால், கேபிளில் ஊற்றிய சூடான தார், விளையாடி கொண்டிருந்த குழந்தை மீது ஒட்டியதால் காயம் ஏற்பட்டது தெரிந்தது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.