பிரியாணி தரமறுத்த மாஸ்டரை தாக்கிய சக ஊழியர்கள் கைது
அண்ணா நகர், மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் அஜய்ஷா, 28. இவர், அண்ணா நகர், சாந்தி காலனியில் உள்ள பிரபல பிரியாணி கடையில், சமையல் மாஸ்டராக பணிபுரிகிறார்.அதே கடையில், மேற்கு வங்கத்தை சேர்ந்த பவன்ஷா, 30, மற்றும் திலீப் பகதுார், 28, ஆகியோரும் ஊழியராக பணிபுரிகின்றனர். மூவரும், சாந்தி காலனி ஏழாவது பிரதான சாலையில் உள்ள வீட்டில் தங்கியுள்ளனர்.நேற்று முன்தினம், திலீப் பகதுார் கடையில் இருந்து பிரியாணி எடுக்க சென்றுள்ளார். அப்போது, அஜய்ஷா பிரியாணி தரமறுத்து, தடுத்ததாக தெரிகிறது.இதனால் ஆத்திரமடைந்த அவர், அறைக்கு திரும்பி உள்ளார். இந்த நிலையில், இரவு அறைக்கு வந்த அஜய்ஷாவிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.ஆத்திரமடைந்த பவன்ஷா மற்றும் திலீப் பகதுார், அஜய்ஷாவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து, அண்ணா நகர் போலீசில் அளித்த புகாரின்படி, பவன்ஷா மற்றும் திலீப் பகதுாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.