உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வடிகால் பள்ளத்தில் கவிழ்ந்த கலவை லாரியால் வீடு சேதம் இழப்பீடு பெற்றுத்தர கோரி புகார்

வடிகால் பள்ளத்தில் கவிழ்ந்த கலவை லாரியால் வீடு சேதம் இழப்பீடு பெற்றுத்தர கோரி புகார்

அம்பத்துார், அம்பத்துார், மங்களபுரம், பஜனை கோவில் தெருவில், மழைநீர் வடிகால் பணிகள் நடக்கின்றன. கடந்த 12ம் தேதி மாலை, அப்பகுதிக்கு ஜல்லி கலவை ஏற்றி, லாரி வந்துள்ளது. எதிர்பாராதவிதமாக, ஜல்லி கலவையுடன் வடிகாலுக்காக தோண்டிய பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது.இந்த விபத்தில், வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை ஒட்டியிருந்த சரவணகுமார் - செந்தமிழ்செல்வி தம்பதியின் வீட்டு கழிப்பறை சுவர் உடைந்து விழுந்தது; வீட்டின் மற்ற சுவர்களும் சேதமடைந்தன.அப்போது வீட்டில் இருந்த சரவணகுமாரின் மகளை, அங்கிருந்தோர் மீட்டனர். 'வாஷிங் மிஷின்' உட்பட பல வீட்டு உபயோக பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.ஆனால், பணி மேற்கொள்ளும் ஒப்பந்ததாரரோ, அதிகாரிகளோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து, அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசில், பாதிக்கப்பட்டோர் தரப்பில் நேற்று புகார் அளிக்கப்பட்டது.அம்பத்துார் மண்டல அதிகாரிகளிடம் கேட்டபோது, 'சாலை பலவீனமாக இருந்ததால், லாரி வீட்டின் மீது சரிந்தது. சேதமடைந்த வீட்டின் கழிப்பறை சுவரை, வடிகால் பணிகள் முடிந்ததும், ஒப்பந்ததாரர் வாயிலாக கட்டி தரப்படும்' என்றனர்.

அதிகாரிகள் அலட்சியம்

மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில் ஈடுபட்ட லாரி, எங்களது வீட்டின் கழிப்பறை சுவர் மீது விழுந்ததில், கழிப்பறை சுவர் முற்றிலுமாக இடிந்து விழுந்தது. வீட்டில் தங்குவதற்கு பயமாக உள்ளது. இயற்கை உபாதைகளுக்காக உறவினர் வீட்டிற்கு செல்லவேண்டி சூழல் உருவாகியுள்ளது. மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பின் தான், கழிப்பறை சுவர் கட்டி தரப்படும் என, ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் அலட்சியமாக பேசுகின்றனர்.- செந்தமிழ்செல்வி,பாதிக்கப்பட்டவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை