உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோர்ட்டில் பெண்களை படம் பிடித்த வழக்கு கைதான முதியவருக்கு நிபந்தனை ஜாமின்

கோர்ட்டில் பெண்களை படம் பிடித்த வழக்கு கைதான முதியவருக்கு நிபந்தனை ஜாமின்

சென்னை:நீதிமன்றத்தில் பெண்களை படம் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 70 வயது முதியவருக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்தவர் சுதிர் ராம்சந்த் புல்சந்தானி, 70. இவர், தன் மீதான வழக்கு விசாரணைக்காக, கடந்த 3ம் தேதி, சென்னை 10வது உரிமையியல் நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். அப்போது, நீதிமன்றத்தில் இருந்த பெண் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் என, சிலரை தன் மொபைல் போனில் படம் பிடித்துள்ளார். பின், அந்த படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்படி, சுதிர் ராம்சந்த் புல்சந்தானி கைது செய்யப்பட்டார். அவர் மீது, எஸ்பிளனேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின், அவரது மொபைல் தடய அறிவியல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. இந்த வழக்கில், தனக்கு ஜாமின் வழங்கக்கோரி, சுதிர் ராம்சந்த் புல்சந்தானி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம், எஸ்.இம்மானுவேல் ஆகியோர் ஆஜராகி, “மனுதாரர் வயதானவர். பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார், அவர் மீது, தவறாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது” என்றனர். இதை ஏற்ற நீதிபதி, மனுதாரரின் வயதையும், புகார்தாரர்களுக்கு அவரால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்பதையும் கருத்தில் கொண்டு, அவருக்கு 10,000 ரூபாய் மற்றும் அதே தொகைக்கு இரு நபர் உத்தரவாதத்தில் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். அடுத்த உத்தரவு வரும் வரை, அவர் தினமும் காலை 10:00 மணிக்கு, எஸ்பிளனேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். சாட்சிகளை கலைக்க கூடாது என்பன போன்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ