மாநகராட்சி பணம் கையாடல் மண்டல காசாளர் சஸ்பெண்ட்
தாம்பரம், தாம்பரம் மாநகராட்சி 5வது மண்டலத்தில், பொதுமக்களிடம் இருந்து வசூலித்த பணத்தை வரவு வைக்காமல் முறைகேட்டில் ஈடுபட்ட காசாளர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். தாம்பரம் மாநகராட்சி, 5வது மண்டலத்தில், பொதுமக்களிடமிருந்து வசூலிக்கும் பணத்தை, வரவு வைக்காமல், போலி 'பில்' கொடுத்து, மோசடி நடைபெறுவதாக புகார் வந்தது. இப்புகாரின்படி, மாநகராட்சி சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. அதில், காசாளர் முரளி என்பவர், முறைகேட்டில் ஈடுபட்டதும், 32 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் உத்தரவின்படி காசாளர் முரளி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். மேலும், இதை முறையாக கண்காணிக்காமல் அலட்சியமாக செயல்பட்ட மேலாளர் விஜயலட்சுமிக்கு விளக்கம் கேட்டு 'மெமோ' அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இம்மண்டலத்தில், இதுபோல மக்கள் பணம் பல வழிகளில், அதிகாரிகளுடன் கைகோர்த்துக் கொண்டு, அரசியல்வாதிகள் கையாடல் செய்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, 4வது மண்டலத்தில், சில மாதங்களுக்கு முன், 1 கோடி ரூபாய் வரை வங்கியில் செலுத்தாமல், செலுத்தப்பட்டதாக கணக்கு காண்பிக்கப்பட்டு, மோசடி நடந்தது கண்டறியப்பட்டது. அப்போது, மோசடியில் ஈடுபட்ட பெண் ஊழியர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். மோசடி செய்த பணத்தை அந்த ஊழியர் திருப்பி செலுத்தி விட்டார். அப்படியிருந்தும், அதே மண்டலத்தில், சில வாரங்களுக்கு முன், ஆண் காசாளர் ஒருவர், 4.15 லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதும் கண்டறியப்பட்டு, அவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.