தவறான தகவல் தந்த மாநகராட்சி மாநில தகவல் ஆணையம் குட்டு
சென்னை:சென்னை மாடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் புகழ்பாலன். இவர், கடந்த 2023ம் ஆண்டு, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அளித்த மனு மீதான நடவடிக்கைகள் குறித்து, சென்னை மாநகராட்சியிடம் விளக்கம் கேட்டிருந்தார். தகவல் கிடைக்காததால் மேல் முறையீடு செய்தார். மனுவை விசாரித்து, மாநில தலைமை தகவல் ஆணையர் முகமது ஷகீல் அக்தர் பிறப்பித்த உத்தரவு: ஆக்கிரமிப்பு அகற்றம் கோரிய மனுதாரரின் மனுவிற்கும், முதல் மேல்முறையீட்டு மனுவிற்கும், சென்னை மாநகராட்சி எந்த தகவலையும் அளிக்கவில்லை என்பது தெரிகிறது. எனவே, அப்போதைய ஐந்தாவது மண்டல பொதுத் தகவல் அலுவலரும், தற்போதைய கோடம்பாக்கம் மண்டல வருவாய் பிரிவு அதிகாரியுமான பிரகாஷ்; அப்போதைய மேல்முறையீட்டு அலுவலரும், தற்போதைய துாத்துக்குடி மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளருமான தமிழ்ச்செல்வன் ஆகியோர் மீது, ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கான விளக்கத்தை, 15 நாட்களுக்குள் அளிக்க வேண்டும். இருவரிடமும், விளக்கம் கேட்டு, வரும் 6ம் தேதிக்குள் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விசாரணையில் ஆஜரான பொதுத் தகவல் அலுவலர், மனுதாரருக்கு இனவாரியான பதில்களை அனுப்பி உள்ளதாகத் தெரிவித்தார். மனுதாரரோ, 'ஆவணங்களின் நகல்கள் அளிக்கப்படவில்லை' என்றார். ராயபுரம் மண்டல செயற்பொறியாளர், மனுதாரரின் மனுவை படித்துப் பார்த்து, சரியான திருத்திய ஆவணங்களின் அடிப்படையில் தகவல்கள், நகல்களை, 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும். தகவலை மனுதாரர் பெற்றதற்கான தபால் சான்றின் நகலை, ஆணையத்தில் ஆஜராகி சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.