உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பாதிப்புகளை அளவீடு செய்யாமல் நிவாரணம் வழங்கியது கண் துடைப்பு கவுன்சிலர் காட்டம்

பாதிப்புகளை அளவீடு செய்யாமல் நிவாரணம் வழங்கியது கண் துடைப்பு கவுன்சிலர் காட்டம்

திருவொற்றியூர், திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம், நேற்று காலை தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் நடந்தது. இதில், மண்டல அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.இதில், எம்.எல்.ஏ., நிதி 33 லட்ச ரூபாய் செலவில். புதிதாக நெட்டுக்குப்பம் கலையரங்கம் கட்டும் பணி; பல வார்டுகளில், சென்னை குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தால் மேற்கொள்ளப்பட்ட, குழாய் பதிக்கும் பணியில் பழுதடைந்த சாலைகளை, 1.06 கோடி ரூபாய் செலவில் செப்பனிடுதல் உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஆறாவது வார்டு கவுன்சிலர் சாமுவேல் திரவியம் பேசுகையில், 'என் வார்டில், கச்சா எண்ணெய் கழிவால் அனைத்து வீடுகளும் பாதிக்கப்பட்டன. கண் துடைப்பிற்காக, சிலருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுவிட்டது. அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்' என, சி.பி.சி.எல்., நிறுவனம் முன் ஆர்ப்பாட்டம் செய்தும் பலனில்லை. மாநகராட்சியும் ஒத்துழைக்க வில்லை எனக்கூறி வெளிநடப்பு செய்ய முயன்றார்.பதிலளித்து பேசிய மண்டலக் குழு தலைவர் தனியரசு பேசியதாவது:எண்ணெய் கழிவு பிரச்னையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்பதே நிலைப்பாடு. முடிந்தவரை ஒத்துழைப்பு அளிக்க தயார். தவிர, மண்டல குழு கூட்டத்தில், அவசிய காரணமின்றி பங்கேற்க தவறும் கவுன்சிலரின் வார்டு தீர்மானம் நிறைவேற்றப்படாது. வார்டில், சாலைப் பணிகள் நடக்கும் பட்சத்தில், அந்த பணி ஆணையை, கவுன்சிலர், ஊர் நிர்வாகத்தினரிடம் காண்பித்து பணிகள் மேற்கொள்ள வேண்டும்.மீறும் பட்சத்தில், அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

அ.தி.மு.க., வெளிநடப்பு

கூட்டத்தில் பங்கேற்க, ஏழாவது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக், 10:00 மணிக்கெல்லாம், கூட்டரங்கிற்கு வந்த நிலையில், அதிகாரிகள் உட்பட யாரும் வரவில்லை. இதனால், வருகை பதிவேடில் கையொப்பமிட்டு, அவர் வெளிநடப்பு செய்தார்.பின் அவர் கூறியதாவது:ஒவ்வொரு முறையும், கூட்டம் குறித்த நேரத்தில் நடத்தப்படுவதே இல்லை. 10:00 மணிக்கு அழைப்பு விடுத்து, யாரும் வரவில்லை. எண்ணெய்க் கழிவால் பாதிக்கப்பட்ட வார்டு மக்கள், மீனவ மக்களுக்கு முழுமையாக நிவாரணம் அறிவிக்கப்படவில்லை.கோரமண்டல் நிறுவன அமோனியா வாயு கசிவு விவகாரத்தை முறையாக கையாளாமல், போராடும் மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர். இந்த மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி, வெளிநடப்பு செய்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை