கன்டெய்னர் லாரி மோதியதில் உடல் நசுங்கி தம்பதி உயிரிழப்பு
மாதவரம்:திருவொற்றியூர், பாரதி நகரைச் சேர்ந்தவர் விஜயன், 39; எம்.ஆர்.எப்., கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ஜெயரசிதா, 33.இருவரும், நேற்று காலை 9:30 மணிக்கு, திருவெற்றியூரில் இருந்து மாதவரம் ரவுண்டானா நோக்கி, 'ஸ்கூட்டி பெப்' ஸ்கூட்டர் வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். மஞ்சம்பாக்கம் அருகே, மாதவரம் சின்ன ரவுண்டானா 200 அடி சாலையில், பின்னால் வேகமாக வந்த கன்டெய்னர் லாரி, விஜயன் ஸ்கூட்டர் மீது மோதியது.இதில், இருவரும் நிலை தடுமாறி விழுந்ததில், மோதிய லாரியின் முன்பக்க சக்கரம், இருவர் மீதும் ஏறி இறங்கியது. சம்பவ இடத்திலேயே, இருவரும் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பலியாகினர்.தகவலறிந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, இறந்தவர்களின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர்.விபத்துக்கு காரணமான, தென்காசியைச் சேர்ந்த கன்டெய்னர் லாரி ஓட்டுனர் முருகன், 48, என்பவரை கைது செய்தனர்.கடந்த வாரம் இறுதியில், இதே பகுதியில் ஸ்கூட்டரில் சென்ற இரு பெண்கள் மீது லாரி மோதியது. இதில் ஒருவர் பலியாக, மற்றொருவர் படுகாயமடைந்தார்.இப்பகுதியில் வாகன தணிக்கையில் ஆர்வம் காட்டும் போக்குவரத்து போலீசார், போக்குவரத்தை சீர்படுத்துவதில் அக்கறை காட்டுவதில்லை. இதனால், இப்பகுதி விபத்து ஏற்படும் முனையமாக மாறி வருகிறது.இங்கு, ஏற்கனவே மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால், போக்குவரத்து போலீசார் கூடுதல் அக்கறை எடுத்து, விபத்துக்கான காரணிகளை ஆராய்ந்து, அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.