உள்ளூர் செய்திகள்

கிரைம் கார்னர்

ஆண் சடலம் மீட்பு குன்றத்துார்: குன்றத்துார் அருகே பெரியப்பணிச்சேரி பகுதியில் உள்ள காலி மனையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம், அழுகிய நிலையில் கிடந்தது. மவுலிவாக்கம் போலீசார் அதை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்தவர் யார், கொலை செய்யப்பட்டாரா என, போலீசார் விசாரித்து வருகின்றனர். இறைச்சி கடை ஊழியர் தற்கொலை குரோம்பேட்டை: குரோம்பேட்டை, லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சக்தி சிவ கஜனகுமரன், 45; இறைச்சி கடை ஊழியர். இவரது முதல் மனைவி கன்னியாகுமரியில் வசிக்கும் நிலையில், இரண்டாவது மனைவியுடன் குரோம்பேட்டையில் வசித்து வந்தார். இரண்டாவது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாக்கிட்டு சக்தி சிவ கஜன குமரன் தற்கொலை செய்து கொண்டார். விஷம் வைத்து பூனை கொலை? ஜாபர்கான்பேட்டை: ஜாபர்கான்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி, 50. இவர் வளர்க்கும் பூனை குட்டியை மர்மமான முறையில், கடந்த 10ம் தேதி இறந்தது. மர்ம நபர் விஷம் வைத்து பூனை குட்டியை கொன்றதாக, எம்.ஜி.ஆர்., நகர் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்கொலைக்கு முயன்றவர் காயம் வேளச்சேரி: வேளச்சேரி, விஜயநகரில் உள்ள கீழ் அடுக்கு மேம்பாலம், 30 அடி உயரம் உள்ளது. நேற்று, 35 வயது மதிக்கத்தக்க நபர், இந்த மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். பலத்த காயமடைந்த அவர் மீட்கப்பட்டு, கிண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தன் பெயர் முத்துகிருஷ்ணன், தந்தை பெயர் ஆறுமுகம் எனக்கூறி, சுயநினைவு இழந்தார். வேளச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர். மதுக்கூட உரிமையாளர் கைது செம்மஞ்சேரி: ஓ.எம்.ஆர்., செம்மஞ்சேரி குமரன் நகரில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு, மணிகண்டன், 40, என்பவர் உரிமத்தை புதுப்பிக்காமல் மதுக்கூடம் நடத்தி வந்தார். இதுகுறித்து புகாரின்படி, செம்மஞ்சேரி போலீசார் நேற்று, மணிகண்டனை கைது செய்தனர். தலைமறைவு குற்றவாளி கைது மடிப்பாக்கம்: மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் 2020-ல் பதிவான திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளிவந்த தினேஷ், 28, ஆலந்துார் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். அவரை கைது செய்ய மே 21ல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. மடிப்பாக்கம் போலீசார், திரிசூலத்தில் இருந்த தினேஷை, நேற்று முன்தினம் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். டீக்கடை உரிமையாளரிடம் தகராறு செய்தவருக்கு ‘காப்பு’ செம்பியம்: பெரம்பூர், அகரம் பகுதியைச் சேர்ந்தவர் சபு, 45 ; டீக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு பெரம்பூர், பாக்சன் தெருவைச் சேர்ந்த அலெக்ஸ், 30, என்பவர் மதுபோதையில் வந்துள்ளார். கடையில் இருந்த சபுவிடம் தரகாறு செய்த அவரை, அங்கிருந்தோர் சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். சிறிது நேரத்தில் மீண்டும் டீக்கடைக்கு வந்த அலெக்ஸ், சபுவை திட்டியபடியே, அடுப்பில் கொதித்து கொண்டிருந்த பாலை தட்டி விட்டுள்ளார். சூடான பாலானது, சபுவின் வயிறு, கால் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டியதில், அவருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தோர், சபுவை மீட்டு, பெரம்பூர் ரயில்வே மருத்தவமனையில் அனுமதித்தனர். செம்பியம் போலீசார், வழக்கு பதிந்து, அலெக்ஸை நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை