டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறை காதி கிராப்ட் கடைகளில் சிக்கல்
சென்னை, கிராமப்புற கைவினைஞர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை, நகர்ப்புறங்களில் விற்பனை செய்யும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், காதி கிராப்ட் விற்பனையகங்கள் செயல்பட்டு வருகின்றன.இங்கு கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் பட்டுப் புடவைகள், காட்டன் புடவைகள், அணிகலன்கள், சோப்பு வகைகள், திணை பொருட்கள், தேன் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ளதை போல், காதி கிராபட் விற்பனையகத்திலும், டிஜிட்டல் பரிவர்த்தனை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், சென்னையில் இயங்கும் சில கடைகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வதில், சிக்கல் ஏற்பட்டுள்ளதாகப் நுகர்வோர் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து நுகர்வோர் தரப்பில் கூறியதாவது: சென்னை, குறளகத்தில் இயங்கி வரும் காதி கிராப்ட் விற்பனையகத்தில், மூன்று மாதங்களாக டிஜிட்டல் பணப்பரிமாற்றம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.பொருட்கள் வாங்கிய பின், டிஜிட்டல் பணபரிமாற்றச் செயலிகளின் வாயிலாக பணம் செலுத்தினால், விற்பனையகத்தின் கணக்கிற்கு பணம் வரவு வைக்க, 30 நிமிடங்கள் முதல் மூன்று நாட்கள் வரை ஆகிறது. பணம் செலுத்திய பின் உறுதி செய்வதற்காக, கடையிலேயே பல மணி நேரம் காத்திருக்கும் நிலையும் ஏற்படுகிறது.இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால், அடுத்த முறை சரி செய்யப்படும் என கூறுகின்றனர். அவ்வாறு சரி செய்யப்பட்டாலும், அவை தற்காலிக தீர்வாக மட்டுமே உள்ளது. மூன்று மாதங்களாக உரிய தீர்வில்லை. இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.