உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  பா.ஜ., பிரமுகருக்கு வெட்டு தி.மு.க., நிர்வாகி கைது

 பா.ஜ., பிரமுகருக்கு வெட்டு தி.மு.க., நிர்வாகி கைது

திருமங்கலம்: திருமங்கலத்தில் பா.ஜ., பிரமுகரை வெட்டிய தி.மு.க., நிர்வாகி உட்பட இருவரை, போலீசார் கைது செய்தனர். திருமங்கலம், டி.வி.நகர் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன், 48; பா.ஜ., நெசவாளர் அணி மாவட்ட தலைவர். அதே தெருவைச் சேர்ந்தவர் தி.மு.க., நிர்வாகி ஆறுமுகம், 49. அதே பகுதியில் உள்ள அரசு நிலம் தொடர்பாக, இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இது குறித்து காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வீட்டு வாசலில் இருந்த விநாயகர் சிலைக்கு, நேற்று காலை மணிகண்டன் பூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் 'ஹெல்மெட்' அணிந்து வந்த இருவரில் ஒருவர், மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டனை வெட்டினார். சுதாரித்த மணிகண்டன், அந்த நபர் அணிந்திருந்த ஹெல்மெட்டை பறித்தபோது, அது ஆறுமுகம் என தெரியவந்தது. அதே சமயம் மணிகண்டனின் மனைவி, அவரை வீட்டிற்குள் இழுத்து சென்று காப்பாற்றினர். இதையடுத்து, ஆறுமுகம் அங்கிருந்து பைக்கில் தப்பி சென்றார். இதில், தலை, கழுத்து தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் காயமடைந்த மணிகண்டன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். விசாரித்த திருமங்கலம் போலீசார், ஆறுமுகம் மற்றும் அவரது நண்பர் பாடி கலைவாணர் நகரைச் சேர்ந்த நித்தியானந்தன், 50 ஆகியோரை கைது செய்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள மணிகண்டனை, தமிழக பா.ஜ., துணை தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இந்த நிலையில், கத்தியால் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகின. இந்த வீடியோவை அழிக்குமாறு போலீசார் தரப்பில் 'அழுத்தம்' தருவதாக, மணிகண்டனும் அவரது மனைவியும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி