உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மீண்டும் டபுள் டக்கர் பஸ் சேவை ஏசி வசதியுடன் சோதனை ஓட்டம்

மீண்டும் டபுள் டக்கர் பஸ் சேவை ஏசி வசதியுடன் சோதனை ஓட்டம்

சென்னை, சென்னையில் 17 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் டபுள் டக்கர் பேருந்துகளை இயக்க, மாநகர போக்குரவத்து கழகம், தனியார் நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வருகிறது. அதுவும் குளுகுளு வசதியுடன் இயக்கும் வகையில், மின்சார பஸ்கள் சோதனை ரீதியாக இயக்கப்பட்டு வருகிறது. சென்னை, மும்பை உள்ளிட்ட பெரிய மாநகரங்களில், 20 ஆண்டு களுக்கு முன், டபுள் டக்கர் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த பேருந்துகளில் ஒரே நேரத்தில் அதிக பேர் பயணிக்கலாம்; மாநகரங்களின் உயரமான கட்டடங்களின் அழகையும் ரசிக்கலாம். குறிப்பாக, சென்னையில் தாம்பரம் - பிராட்வே இடையே, '18 ஏ' வழித்தடத்தில், டபுள் டக்கர் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதற்கிடையே, மாநகரில் மேம்பாலங்கள் அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால், இந்த பேருந்துகளின் சேவை, 2008ம் ஆண்டில் நிறுத்தப்பட்டன. இதையடுத்து, இரண்டு பேருந்துகளை ஒருங்கிணைந்த டிரெய்லர் பேருந்துகள் இயக்கப்பட்டன. குறுகிய சாலைகளில் செல்வது கஷ்டமாக இருந்ததால், இந்த சேவையும் நிறுத்தப்பட்டது. தற்போது, புது பொலிவுடன், 'ஏசி' வசதியுடன் கூடிய அதிநவீன மின்சார, 'ஏசி' பேருந்துகள் பல்வேறு நகரங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. மும்பை, ஹைதராபாத் நகரங்களில் டபுள் டக்கர் மின் பேருந்துகளை, 'அசோக் லேலண்ட்' நிறுவனம் இயக்கி வருகிறது. இதற்கிடையே, சென்னையில் பிராட்வே - தாம்பரம் தடத்தில், டபுள் டக்கர் மின்சார 'ஏசி' பேருந்து சோதனை முயற்சியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்தை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வியந்து பார்க்கின்றனர். இதுகுறித்து, சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் தனியார் பங்களிப்போடு, டபுள் டக்கர் 'ஏசி' பஸ் சேவையை மீண்டும் துவங்குவது குறித்து, ஆரம்ப கட்ட பேச்சு நடந்து வருகிறது. முதற்கட்டமாக, 20 'ஏசி' பஸ்கள் வாங்கி, தேர்வு செய்யப்பட்ட வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளது. இருப்பினும், போக்குவரத்து துறை இறுதி செய்து, டெண்டர் வெளியிட்ட பிறகே, இந்த பஸ் சேவை எப்போது வரும் என்பதை கூற முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை