நீர்வழித்தட ஆக்கிரமிப்பாளர்கள் 15 நாளில் காலி செய்ய நோட்டீஸ்
சென்னை, வேளச்சேரியில், ஒரு ஏக்கர் பரப்பு நீர்வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்பாளர்கள், 15 நாட்களில் காலி செய்ய, வருவாய்த் துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.சோழிங்கநல்லுார் தாலுகாவுக்கு உட்பட்ட, பள்ளிக்கரணை சதுப்பு நிலம், சர்வே எண்: 657ல், 1,630 ஏக்கர் பரப்பு கொண்டது. இதன் அருகில், 658 சர்வே எண்ணில், 200 ஏக்கர் அரசு இடம் உள்ளது.சதுப்பு நிலத்தின் எல்லையில் இருந்து, வேளச்சேரி தாலுகா துவங்குகிறது. வேளச்சேரி தாலுகா சார்வே எண்களில் உள்ள உட்பிரிவை போலியாக பயன்படுத்தி, சோழிங்கநல்லுார் தாலுகாவுக்கு உட்பட்ட சதுப்பு நிலத்தை, சிலர் ஆக்கிரமித்துள்ளது தெரிந்தது.இது தொடர்பான நீதிமன்ற உத்தரவின்பேரில், வருவாய்த்துறை நோட்டீஸ் வழங்கியது. இதன்படி, ஒரு ஏக்கர் பரப்பு நீர்வழித்தடத்தில், ஒரு தனியார் மருத்துவமனை, ஒரு கார் செட், ஆறுகண் கால்வாயை ஒட்டி கட்டிய பிரமாண்டமான வணிக கட்டடம் மற்றும் 10க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமித்துள்ளன.இந்த கட்டடங்களை, 15 நாட்களில் காலி செய்ய வேண்டும் என, வருவாய்த் துறையினர் நோட்டீஸ் வழங்கினர். அடுத்த கட்டமாக, வேளச்சேரி தாலுகாவுக்கு உட்பட்ட ஆக்கிரமிப்பு கட்டடங்களுக்கு நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மொத்த ஆக்கிரமிப்புகளை அகற்றினால், வேளச்சேரியில் ஏற்படும் வெள்ள பாதிப்பு குறையும் எனவும், அதிகாரிகள் கூறினர்.