செங்கல்பட்டில் மகளை சீரழித்த தந்தைக்கு ஆயுள் தண்டனை
செங்கல்பட்டு, செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், 16 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவரது தந்தை வில்சன், 46; ஆட்டோ ஓட்டுநர். சிறுமி ஏழாம் வகுப்பு படித்த போது, வீட்டில் யாருமில்லாத நேரங்களில், வில்சன் தன் மகளை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.தன் மனைவிக்கு இரவில் துாக்க மாத்திரை கொடுத்து துாங்க வைத்துவிட்டு, சிறுமியை பல நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து யாரிடமும் கூறக் கூடாது என, மிரட்டி உள்ளார். இதுபற்றி சிறுமி, பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவிக்க, அவர்கள், 'சைல்ட் லைன்' எண்ணுக்கு, 2024 பிப்., 5ம் தேதி தகவல் தெரிவித்தனர்.சிறுமியின் தாய்க்கும் தகவல் தெரிந்து, செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து, வில்சனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இவ்வழக்கு, செங்கல்பட்டு 'போக்சோ' நீதிமன்றத்தில், நீதிபதி நசீமாபானு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் மைதிலிதேவி ஆஜரானார்.வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், வில்சனுக்கு ஆயுள் தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி நசீமாபானு, நேற்று தீர்ப்பளித்தார்.பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக, 10 லட்சம் ரூபாய் வழங்க, தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதன் பின், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வில்சனுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.