கஞ்சா போதையில் தினசரி தகராறு மகனை தீர்த்துக்கட்டிய தந்தை
அம்பத்துார்: கஞ்சா போதையில் தினமும் தகராறில் ஈடுபட்ட மகனை, தந்தையே கழுத்து அறுத்து கொலை செய்தது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அம்பத்துார், கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் மன்மதன், 57. இவர், அயனம்பாக்கத்தில் பன்றி இறைச்சி விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி கல்யாணி, 53. தம்பதியின் மகன் ஸ்ரீதர், 31; ஆட்டோ ஓட்டுநர். கஞ்சா போதைக்கு அடிமையான ஸ்ரீதர், சரிவர சவாரிக்கு செல்லாமல் ஊர் சுற்றி திரிந்துள்ளார். இந்த நிலையில், வீட்டின் படுக்கையறையில் நேற்று காலை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், ஸ்ரீதர் இறந்து கிடந்தார். தகவலறிந்த அம்பத்துார் போலீசார், ஸ்ரீதரின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். இதில், ஸ்ரீதருக்கும், அவரது பெற்றோருக்கும் தினசரி தகராறு ஏற்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஸ்ரீதரின் தந்தை மன்மதன் மற்றும் தாய் கல்யாணி ஆகியோரிடம், போலீசார் விசாரித்தனர். இதில், ஸ்ரீதர் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு அடிமையானதும், பெற்றோர் வீட்டில் இருக்கும்போதே, பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்து, உல்லாசமாக இருந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில், மன்மதன் தன் புது வீட்டில் பயன்படுத்துவதற்காக வாங்கி வைத்திருந்த, டைல்ஸ் மற்றும் ஜன்னல் கண்ணாடிகளை ஸ்ரீதர் உடைத்து, அட்டகாசம் செய்துள்ளார். மகனின் செயலால், கடந்த 10 நாட்களாக மன்மதன் மற்றும் கல்யாணி துாக்கத்தை தொலைத்து மன வேதனையில் இருந்துள்ளனர். மேலும், பெற்றோருக்கு ஸ்ரீதர் தொடர்ந்து கொலை மிரட்டலும் விடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மன்மதன், கத்தியை வைத்து, மகன் ஸ்ரீதரை கழுத்தறுத்து கொலை செய்ததும், இதற்கு ஸ்ரீதரின் தாய் கல்யாணி உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அம்பத்துார் போலீசார் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.