உணவு திருவிழா 28ம் தேதி வரை நீட்டிப்பு
சென்னை: பொதுமக்களின் வரவேற்பு காரணமாக, பெசன்ட் நகரில் நடந்து வரும் 'உணவு திருவிழா' வரும், 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், கிராமப்புற மகளிர் சுய உதவி குழுவினர் தயாரிக்கும் உணவுகளை அனைத்து தரப்பினரும் சுவைக்கும் வகையில், சென்னையில் உணவு திருவிழா நடத்தப் பட்டு வருகிறது. சென்னை பெசன்ட் நகரில், கடந்த 21ம் தேதி உணவு திருவிழா துவங்கியது. இதில், 38 அரங்குகளில் 235 கடைகள் அமைக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற உணவுகள் விற்கப்பட்டு வருகிறது. கொங்கு மட்டன் பிரியாணியில் துவங்கி, கறி தோசை, கல் தோசை என, அனைத்து வகை உணவுகளும், இத்திருவிழாவில் இடம் பெற்றுள்ளன. முட்டை மிட்டாய், செட்டிநாடு உணவு பொருட்கள் உட்பட, 30 தின்பண்டங்களும் விற்கப்படுகின்றன. இந்நிலையில், நேற்றுடன் நிறைவடைவதாக இருந்த உணவு திருவிழா, சென்னை மக்களின் வரவேற்பு காரணமாக, வரும் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.