அம்மன் கோவில்களை தரிசிக்க இலவச ஆன்மிக பயணம்
திருவொற்றியூர், ஆடி மாதம் அம்மன் கோவில்கள் இலவச ஆன்மிக பயணத்தை, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு நேற்று துவக்கி வைத்தார்.தமிழக அரசு அறிவித்தபடி ஆண்டுதோறும் ஆடி மாதங்களில், 60 - 70 வயது மூத்த குடிமக்கள், அரசு நிதியில் சென்னை, மதுரை, தஞ்சாவூர், திருச்சி, கோவை, ஈரோடு, நெல்லை ஆகிய நகரங்களை தலைமையிடமாக கொண்டு, ஆக., 15 வரை ஐந்து கட்டமாக ஆன்மிக பயணம் அழைத்து செல்லப்படுகின்றனர். திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில், 56 மூத்த குடிமக்கள் ஆன்மிக பயணத்தை, அமைச்சர் சேகர்பாபு நேற்று துவக்கி வைத்தார்.பின் அவர் அளித்த பேட்டி:முதற்கட்ட ஆன்மிக பயணத்தில், சென்னையில் 56 பேர் உட்பட, மாநிலம் முழுதும் இருந்து 389 பக்தர்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதற்காக கடந்தாண்டு, 25 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, 1,003 பேர் பயன் பெற்றனர். இந்தாண்டு, 50 லட்சம்ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு சேகர்பாபு கூறினார். இதில், வடசென்னை தி.மு.க., - எம்.பி., கலாநிதி, திருவொற்றியூர் எம்.எல்.ஏ., - கே.பி.சங்கர், மண்டல குழு தலைவர் தனியரசு மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.