பெண் ஊழியரிடம் ரூ.1.75 கோடி மோசடி ஜிம் ஓனர் கைது
சென்னை :உடற்பயிற்சி கூடம் வைத்து தருவதாக கூறி, பெண் ஊழியரிடம் 1.75 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட உடற்பயிற்சி கூட உரிமையாளரை, போலீசார் கைது செய்தனர். திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன், 44. இவருக்கு சென்னை முழுதும், 15 உடற்பயிற்சி கூடம் உள்ளது. இவரது, ஆழ்வார்பேட்டை உடற்பயிற்சி கூடத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த பவித்ரா, 27, என்பவருக்கு உடற்பயிற்சி கூடம் வைத்து தருவதாக கூறி உள்ளார். அதன்படி, பாரிமுனையில் உள்ள 'யூகோ' வங்கியில், 1.75 கோடி ரூபாய், பவித்ரா பெயரில் கடன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், வாக்குறுதி அளித்தப்படி உடற்பயிற்சி கூடம் அமைத்து தரவில்லை. இது குறித்து கேட்டதற்கு அலைக்கழித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 30ம் தேதி, ஐஸ்ஹவுஸ் டாக்டர் பெசன்ட் சாலை பகுதியில், சீனிவாசனை சந்தித்த பவித்ரா மீண்டும் இது குறித்து கேட்டுள்ளார். அப்போது சீனிவாசன், அவரை தாக்கி உள்ளார். இது குறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், பவித்ரா புகார் அளித்தார். விசாரித்த ஐஸ்ஹவுஸ் போலீசார், நேற்று சீனிவாசனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின், நீதிமன்ற ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.