போலீசார் நடத்திய கைப்பந்து போட்டி இந்திரா நகர் இளைஞர்கள் அசத்தல்
அடையாறு: மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நடத்திய கைப்பந்து போட்டியில், இந்திரா நகர் இளைஞர்கள் முதல் பரிசு பெற்றனர். அடையாறு மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பில், போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு கைப்பந்து போட்டி, நேற்று முன்தினம் இரவு, பெசன்ட் நகரில் நடந்தது. இதில், கடலோர பகுதி இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு இளைஞர்கள் பங்கேற்றனர். போட்டிகள் முடிவில், திருவான்மியூர், இந்திரா நகர் குடியிருப்பு இளைஞர் அணி முதல் பரிசையும், பெசன்ட் நகர், ஊரூர் குப்பம் இளைஞர் அணி இரண்டாவது பரிசையும் பெற்றன. இவர்களுக்கு, அடையாறு மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி கமிஷனர் கந்தவேல், ஆய்வாளர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.