வண்டலுார் பூங்காவில் காயத்துடன் திரியும் மான்கள் சமூக வலைதளத்தில் புகார்
சென்னை:வண்டலுார் உயிரியல் பூங்காவில், வனவிலங்குகள், பறவைகள், பாலுாட்டிகள் என, 2,000த்திற்கும் மேற்பட்ட உயிரினங்கள் பராமரிக்கப்படுகின்றன.இந்நிலையில், பூங்காவில் உள்ள மான்கள் காயமடைந்து சுற்றித்திரிவதாகவும் அவற்றை பூங்கா நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.இது குறித்து, சமூக வலைதளத்தில் ஒருவரின் பதிவு:சில தினங்களுக்கு முன் வண்டலுார் பூங்காவிற்கு சென்றிருந்தோம். அங்கு, கூண்டில் இல்லாமல் வெளியில் சுற்றித் திறிந்த மானின் ஒரு கால் காயமடைந்து இருந்தது.எந்த மருத்துவ உதவியும் அளிக்கப்படவில்லை. மற்றொறு மானுக்கு கொம்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.மாலை நேரங்களில், கேண்டின் கழிவுகளை சில மான்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கும் பூங்கா நிர்வாகம், அங்குள்ள விலங்குகளை முறையாக பராமரிக்கவில்லை.இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.வண்டலுார் பூங்கா உயர் அதிகாரிகள் கூறியதாவது:வண்டலுார் உயிரியல் பூங்காவில், காயமடையும் விலங்குகளுக்கு, உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.மற்ற விலங்குகள் கடித்ததன் காரணமாக, மானின் கால் பகுதி காயமடைந்துள்ளது. அவற்றுக்கு சிகிச்சையும் வழங்கப்பட்டுள்ளது.குளிர்காலங்களில், இயற்கையாகவே மான்களின் கொம்பு பகுதி உதிரும். அவற்றை காயமடைந்ததாக கருதக்கூடாது.பூங்காவிற்கு வரும் மக்கள், விலங்குகளுக்கு உணவு அளிக்க வேண்டாம் என, பலமுறை சொல்லி வருகிறோம். இருப்பினும், சிலர் மீறி உணவளிக்கின்றனர். இதனால், சில விலங்குகள் வெளியே வந்து அவற்றை உண்கின்றன.கேண்டின் மற்றும் குப்பை தொட்டிகள் உள்ள இடங்களில், 100 'ஸ்டாண்ட்' அமைக்க உள்ளோம். இதனால், குப்பை கழிவு கீழே விழாமல் இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
காணும் பொங்கல் கூட்டத்தை
சமாளிக்க ஏற்பாடுகள் தீவிரம்ஒவ்வொரு ஆண்டும், காணும் பொங்கலன்று வண்டலுார் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை சரிந்து வருகிறது.கடந்த காணும் பொங்கலன்று, 23,000 பேர் மட்டுமே வந்தனர். இது கடந்த காலங்களை காட்டிலும் மிக குறைவு.டிக்கெட் கட்டணம் 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதே பார்வையாளர்கள் குறைந்து வருவதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்நிலையில், இந்த காணும் பொங்கல் கூட்டத்தை சமாளிக்க, அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, போதிய ஏற்பாடுகளை நிர்வாகம் செய்து வருகிறது.ஆன்லைன் டிக்கெட் நடைமுறை அமலில் இருந்தாலும், ஏழை மக்களின் வசதிக்காக, ஏழு டிக்கெட் கவுன்ட்டர்கள் அமைக்கப்படுகின்றன.