ரவுடி சத்யா மீதான குண்டாஸ் ரத்து
சென்னை, ரவுடி சத்யாவை, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்து, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியைச் சேர்ந்தவர் சத்யராஜ் என்ற சீர்காழி சத்யா, 40. ரவுடியான இவரை, கடந்த ஜூனில், கிழக்கு கடற்கரை அருகே மாமல்லபுரம் போலீசார், துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.சத்யா மீது, 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறி, கடந்த ஜூலை 11ல், குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், சத்யாவின் தாய் தமிழரசி மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு, சத்யாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்து, பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.