பஸ் பயணியரை குறிவைத்து திருட்டில் ஈடுபட்டவர் கைது
வடக்கு கடற்கரை, சூளைமேடு, பத்மநாபா நகரைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி, 35. இவர், கடந்த மார்ச் 14ம் தேதி, தண்டையார்பேட்டை, காலரா மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் இருந்து, தடம் எண்: 56சி பேருந்தில் ஏறினார்.வடக்கு கடற்கரை பேருந்து நிறுத்தம் வந்து கைப்பையை தேடியபோது, வெள்ளி கொலுசு, வெள்ளி செயின் மற்றும் 500 ரூபாய் இருந்த மணிபர்ஸ் திருட்டு போனது தெரிந்தது.இது குறித்து வடக்கு கடற்கரை போலீசார் விசாரித்தனர். இதில், கொருக்குப்பேட்டை, பாரதி நகர் ஹவுசிங் போர்டைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், 46, அவரது நண்பருடன் சேர்ந்து மணிபர்சை திருடியதும், பின் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் வாலிபரிடம் மொபைல் போன் திருடியதும் தெரியவந்தது. கிருஷ்ணகுமாரிடம் இருந்த மொபைல் போனை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர். தலைமறைவான அவரது கூட்டாளியை தேடி வருகின்றனர்.