போலீசுக்கு பயந்து பைக்கில் பறந்தவர் வேகத்தடையில் விழுந்து உயிரிழப்பு
திருவான்மியூர், எண்ணுாரைச் சேர்ந்தவர் பிரேம்குமார், 35; ஐ.டி., ஊழியர். இவரது, 'ஹோண்டா டியோ' இருசக்கர வாகனம், இம்மாதம் 12ம் தேதி இரவு 10:30 மணிக்கு, திருவான்மியூர் கடற்கரையில் நின்றது.ரோந்து சென்ற போலீசார், வாகனம் தனியாக நின்றதால் விசாரிப்பதற்காக அங்கு நின்றனர். சில நிமிடங்களில், 'ரேபிடோ பைக்'கில் வந்த பிரேம்குமார், தன் இருசக்கர வாகனத்தை எடுக்க சென்றார்.போலீசார் அவரை மறித்து கேள்வி எழுப்பியபோது, 'நண்பரை பார்க்க வந்தேன். அவசரம் என்பதால் புறப்படுகிறேன்' எனக்கூறி, அங்கிருந்து உடனடியாக கிளம்பினார்.அதிவேகமாக சென்ற பிரேம்குமார், அங்குள்ள ஒரு வேகத்தடையில் ஏறி இறங்கும்போது, நிலைதடுமாறி விழுந்து, சுயநினைவு இழந்தார்.திருவான்மியூர் போலீசார், சம்பவம் குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிரேம்குமார், நேற்று முன்தினம்சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:பிரேம்குமார், தனக்கு தெரிந்த நபரை ரகசியமாக சந்திக்க திருவான்மியூர் கடற்கரைக்கு வந்துள்ளார். புறப்படும்போது, பைக் அருகில் போலீஸ் நின்றதால், விசாரணைக்கு பயந்துள்ளார்.போலீசாரை சமாளிப்பதற்காக, சற்று துாரம் சென்று, 'ரேபிடோ' புக் செய்து வந்துள்ளார். கடற்கரையில் இருந்து கிளம்பும்போது, அதிவேகமாக பைக்கில் சென்று உயிரை விட்டுள்ளார்.தெரிந்த நபரை பார்க்க வந்தேன் என கூறினாலே விட்டிருப்போம். தவறு செய்யாவிட்டால் யாரும் பயப்பட தேவையில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.