பாதுகாப்பான கட்டுமான பணி செய்யாவிட்டால் பணிகள் நிறுத்தப்படும் என மேயர் பிரியா தகவல்
சென்னை, சென்னை மாநகராட்சியில் பாதுகாப்பான கட்டுமானம் மற்றும் இடிபாட்டு கழிவு மேலாண்மை, அதன் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து, பொறியாளர்களுக்கான பயிற்சி வகுப்பை, மேயர் பிரியா நேற்று துவக்கி வைத்தார்.பின், மாநகராட்சி மேயர் பிரியா கூறியதாவது:இந்த வழிகாட்டு நெறிமுறைகள், ஏற்கனவே நடைமுறைக்கு வந்துள்ளன. தற்போது, அலுவலர்களுக்கு அதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது.* அதன்படி, ஒரு ஏக்கருக்குள் கட்டுமானம் பணி செய்யும்போது, 6 மீட்டர் உயரத்திலும், அதற்கு மேல் என்றால், 10 மீட்டர் உயரத்திலும், உலோகத்தால் தடுப்பு அமைக்க வேண்டும்* கட்டட இடிபாடுகளால் துாசி பரவுவதை தடுக்க, அடர்த்தியான துணி தார்ப்பாய் இரட்டை அடுக்கு பச்சை வலையால் மூட வேண்டும். துாசி பரவாமல் தண்ணீர் தெளிக்க வேண்டும்* கட்டுமான பணி நடக்கும் இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்* கட்டடத்தின் உயரம், 18.5 மீட்டருக்கு மேல் இருந்தால், சென்சார் அடிப்படையில் காற்று மாசை கண்டறியும் கருவி பயன்படுத்த வேண்டும்* கட்டட இடிபாட்டு பணிகள் முடிவுற்றவுடன் உடனுக்குடன் கட்டட இடிபாட்டு கழிவு அகற்ற வேண்டும்.இந்த விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும். அதற்கு முன், 15 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அதற்குள் தவறை சரி செய்யாவிட்டால், 20,000 சதுர மீட்டர் பரப்பளவிற்கு கட்டட கட்டுவோருக்கு 5 லட்சம் ரூபாய்; 500 ச.மீ., முதல் 20,000 ச.மீ.,க்குள் கட்டுவோருக்கு 25,000 ரூபாய்; 300 ச.மீ., முதல் 500 ச.மீ., பரப்பளவிற்குள் கட்டுவோருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும்.அதன்பின், ஏழு நாட்களுக்குள் சரி செய்யாவிட்டால், கட்டுமான நடவடிக்கைகள் நிறுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.