ஆவடி கிளை நுாலகத்தில் அமைச்சர் மகேஷ் ஆய்வு
ஆவடி, ஆவடி மாநகராட்சி, 41வது வார்டு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், திருவள்ளூர் மாவட்ட முழுநேர கிளை நுாலகம் செயல்படுகிறது. 29 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த நுாலகம், பாழடைந்த கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.இங்கு, 60,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. 6,200 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.கட்டடம் பாழடைந்து இருப்பதால், புத்தகங்கள் வீணாகும் சூழல் உருவாகி உள்ளது. மழைக்காலங்களில், நுாலகத்தை சுற்றி மழைநீர் தேங்கி நிற்பதால், வாசகர்கள் வந்து செல்ல முடியாத நிலை உள்ளது.இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது.இந்த நிலையில், தமிழக கல்வித்துறை அமைச்சர் மகேஷ், நேற்று மதியம் நுாலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.இது குறித்து சமூக ஆர்வலர் தரணிதரன் கூறுகையில், ''நுாலகத்தை வேறு கட்டடத்தில் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறோம். அமைச்சரின் திடீர் ஆய்வின் வாயிலாக நுாலகத்திற்கு விமோசனம் கிடைக்கும் என நம்புகிறோம்,'' என்றார்.