உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எம்.எல்.ஏ., விடுதி முற்றுகை துாய்மை பணியாளர்கள் கைது

எம்.எல்.ஏ., விடுதி முற்றுகை துாய்மை பணியாளர்கள் கைது

சென்னை: தி.மு.க., தேர்தல் வாக்குறுதிப்படி, பணி நிரந்தரம் கோரி, சேப்பாக்கம் எம்.எல்.ஏ., விடுதி மற்றும் ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்ட துாய்மை பணியாளர்கள் 116 பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர். சென்னை மாநகராட்சி, ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் குப்பை கையாளும் பணியை, தனியார் நிறுவனத்திடம் மாநகராட்சி ஒப்படைத்தது. இதில், தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தில் பணியாற்றிய துாய்மை பணியாளர்கள், தங்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை; ஒப்பந்த நிறுவனம் ஊதியத்தை குறைக்கிறது என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி, தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, சேப்பாக்கம் எம்.எல்.ஏ., விடுதியை, 94 துாய்மை பணியாளர்கள், நேற்று முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அதேபோல், மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், மாநகராட்சி மேயர் மற்றும் கமிஷனரிடம் மனு கொடுக்க, 22 துாய்மை பணியாளர்கள் வந்தனர். அவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அதன்படி, 116 பேர் கைது செய்யப்பட்டு, பல்வேறு சமூக நலக்கூடங்களில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை