காருக்குள் இறந்து கிடந்த ஓட்டுநர் சாவில் மர்மம்
கும்மிடிப்பூண்டி: மணலி அடுத்த, விமலாபுரத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன், 41; சென்னையில் உள்ள சுகாதார துறை மண்டல அலுவலகத்தில் தற்காலிக கார் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம், பொன்னேரியில் வசிக்கும், உதவி சுகாதார அலுவலர் மோகனசுந்தரம் என்பவரை அலுவலகம் அழைத்து வர காரில் சென்றார்.ஆனால், அவர் வீட்டுக்கு மணிவண்ணன் வராததால், வேறு ஒரு காரில் அலுவலகம் சென்ற மோகனசுந்தரம், மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது, தச்சூர் பகுதியில், மணிவண்ணன் ஓட்டி வந்த கார், சாலையோரம் நின்றிருந்ததை கண்டார். காரை திறந்து பார்த்தபோது, அதில் மணிவண்ணன் சுயநினைவு இன்றி கிடந்தார். ஆம்புலன்ஸ் சேவை மருத்துவ உதவியாளர்கள் பரிசோதனையில், அவர் உயிரிழந்தது தெரியவந்தது.இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்த கவரைப்பேட்டை போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.