உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புத்தக கண்காட்சிக்கு இனி நந்தனம் மைதானம் போதாது

புத்தக கண்காட்சிக்கு இனி நந்தனம் மைதானம் போதாது

தன் தந்தையின் 'பூங்கொடி' பதிப்பகத்தில் இருந்து பாடம் கற்று, 'சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்' என்ற பதிப்பகத்தை நடத்தி வருபவர் புகழேந்தி. இவர், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமான பபாசியின் முன்னாள் செயலர். அவரிடம், புத்தகக்காட்சி குறித்து பேசியதில் இருந்து...

சென்னை புத்தகக்காட்சி கடந்து வந்த பாதை?

சென்னையில் புத்தகக்காட்சியை வெறும் 20 அரங்குகளுடன் துவங்கி, தற்போது 1,000 அரங்குகளை நோக்கி நடைபோட பலர் உழைத்திருக்கின்றனர். அது 47 ஆண்டு கதை.இது போன்ற பிரமாண்டமான புத்தகக்காட்சி எந்த மாநிலத்திலும் நடப்பதில்லை. வெளிநாடுகளில் இருந்து இங்கு வரும் வாசகர்களைப் போல வேறெங்கும் வருவதும் இல்லை.நாட்டின் மிகப்பெரிய புத்தகக்காட்சி எனக் கூறப்படும், உலக புத்தகக்காட்சியாக அறியப்படும் டில்லி பிரகதி மைதான புத்தகக் காட்சி கூட இதற்கு நிகரில்லை.அங்கு, இரண்டு பதிப்பகங்களுக்கு இடையில் நடக்கும் வணிகமாகத்தான் இருக்கும். இங்குதான், எழுத்தாளர், பதிப்பாளர், வாசகர் என்ற நேரடி சந்திப்பு நிகழ்கிறது. இதை தக்க வைக்க, நாம் நிறைய செயல்பட வேண்டி உள்ளது.

தற்போதைய புத்தகக்காட்சி பற்றி?

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடக்கும் புத்தகக்காட்சி பிரமாண்டமாக வளர்ந்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் வருகின்றனர். ஆனால், இது வாசகர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் போதுமானதாக இல்லை. வாசகர்களின் எண்ணிக்கைக்கு, இங்குள்ள வசதிகள் போதவில்லை.

தமிழக அரசு நிதி தருகிறதே?

ஆம். அது எந்த ஆட்சியாக இருந்தாலும், வாசிப்பையும், புத்தக விற்பனையையும் மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கம் உடையதாக உள்ளது. அதனால் தான் நிதி உதவி செய்கிறது. ஆனால், அந்த நிதியிலிருந்து வசதிகள் செய்யப்படுவதில்லை.

என்னென்ன வசதிகள் வேண்டும்?

நிதியுதவியை வைத்து, வாசகர்களுக்கான வசதிகளை செய்ய வேண்டும். பொதுவாக நந்தனம் வளாக அரங்கில் காற்றோட்ட வசதி இல்லை. மழை போன்ற இயற்கை இடர்பாடுகளில் இருந்து புத்தகங்களை பாதுகாப்பது அவசியம். ஆனால், இங்கு கூரை ஒழுகுகிறது, தரை வழுக்குகிறது. இதை சரி செய்து, வாசகர்களுக்கு வசதிகளை செய்ய, இந்த மானியத்தை பயன்படுத்த வேண்டும்.

என்னென்ன செயல்படுத்தலாம்?

குழந்தைகள், பெண்கள், தமிழ், ஆங்கிலம் என, தனித்தனி வகைப்பாடுகளுக்கு தனித்தனியான வரிசைகளை உருவாக்க வேண்டும். அப்போது தான், நெரிசல் இன்றி தங்களுக்கான புத்தகங்களை வாசகர்கள் தேர்வு செய்வர். அரங்குகளை பெற விரும்பும் உறுப்பினர்களுக்கு, கட்டணத்தைக் குறைக்க வேண்டும்.தவிர 1,000த்துக்கும் மேற்பட்ட அரங்குகளை அமைக்க, நந்தம்பாக்கம் வர்த்தக மையம் போன்ற பரந்து விரிந்த பாதுகாப்பான இடமே எதிர்காலத்துக்கு சிறந்தது.-- நமது நிருபர் --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ