தேசிய செஸ் போட்டி: வேலம்மாள் பள்ளி வீராங்கனையர் வெள்ளி
சென்னை: பெங்களூரில் நடந்த தேசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில், வேலம்மாள் பள்ளி வீராங்கனையர் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினர். இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் மற்றும் இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், 69வது தேசிய பள்ளி சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி, பெங்களூரின் சர்ஜாபூரில் நடந்தது. இதில், தேசத்தின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் பள்ளி மாணவர்களும், மாணவியரும் பங்கேற்றனர். 10 வயது முதல் 19 வயது வரையிலான பல்வேறு வயது பிரிவுகளில், போட்டிகள் நடந்தன. இதில், 19 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில், சென்னை ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியின் கஸ்துாரிபாய், 17, தீப்சிகா, 15, அமுல்யா குருபிரசாத், 17, அனுஷா, 15, ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினர்.