உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தேசிய சீனியர் ஹாக்கி: காலிறுதியில் ஒடிசா, மணிப்பூர்

தேசிய சீனியர் ஹாக்கி: காலிறுதியில் ஒடிசா, மணிப்பூர்

சென்னை, சென்னையில் நடந்து வரும் தேசிய சீனியர் ஹாக்கி போட்டியில், மிசோரம் அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஹரியானா அணி அசத்தல் வெற்றி பெற்றது.தேசிய சீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி, சென்னை, எழும்பூர், மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் கடந்த வாரம் துவங்கியது. நாடு முழுதும் இருந்து, 31 மாநில அணிகள் பங்கேற்றுள்ளன. எட்டு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.இதில் 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள மிசோரம், ஹரியானா அணிகளுக்கு இடையிலான போட்டி, நேற்று காலை நடந்தது.வலுவான ஹரியானா அணியினரின் தாக்குதல் ஆட்டத்தால், மிசோரம் அணி நிலை குலைந்தது. ஆட்டம் முழுதும் ஹரியானா அணியினர் வசமே பந்து இருந்தது. போட்டியின் 4வது நிமிடத்தில், அந்த அணியின் பிரதீப் சிங் முதல் கோல் அடித்து, கணக்கை துவக்கி வைத்தார்.இதையடுத்து, ரோகித் 31, 34, 47, 58வது நிமிடங்களில், நான்கு கோல் அடித்து அசத்தினார். ஜோகிந்தர் சிங், அமீத் ஜகால், ராஜேந்தர் சிங் முறையே 41, 52, 57வது நிமிடங்களில் தங்கள் பங்கிற்கு, தலா ஒரு கோல் அடித்தனர்.ஆட்ட நேர முடிவில், 8- - 0 என்ற கோல் கணக்கில், ஹரியானா அணி அபார வெற்றி பெற்றது.

காலிறுதியில் மணிப்பூர்

'எச்' பிரிவு போட்டியில், மணிப்பூர், அசாம் அணிகள் மோதின. விறுவிறுப்பான ஆட்டத்தின் மூன்றாவது நிமிடத்தில், மணிப்பூரின், கணேந்திராஜீட் ஒரு அதிவேக, 'பீல்ட் கோல்' அடித்தார். இது, மணிப்பூரின் முதல் கோலாக பதிவு செய்யப்பட்டது. அடுத்து, 10வது நிமிடத்தில் மணிப்பூரின் தவ்னாஜம் அடுத்த கோலை அடிக்க, அசாம் அணி, மணிப்பூர் அணியின் வேகத்தை சமாளிக்க திணறியது. தொடர்ந்து, மணிப்பூருக்கு, 13வது நிமிடத்தில் கிடைத்த, 'பெனால்டி கார்னர்' வாய்ப்பை சரியாக பயன்படுத்திய சிங்கலேனா, பந்தை வேகமாக கோலாக மாற்றினார்.மின்னல் வேகத்தில் முன்னேறிய டிப்பு சிங், அசாம் அணியின் தடுப்பை தகர்த்து, (14, 27, 36)வது நிமிடத்தில், 'ஹாட்ரிக்' கோலை அடித்தார்.'அட்டாக்' திசையில் சிறப்பாக விளையாடிய, மணிப்பூர் அணியின் வீரர்கள், அடுத்தடுத்து கோல்களை விளாச, முடிவில் மணிப்பூர், 10--0 என்ற கோல் கணக்கில் அசாமை வென்று, காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் மணிப்பூர் அணி, பஞ்சாப் அணியை எதிர்கொள்ள உள்ளது.மற்றொரு போட்டியில், கோவா, குஜராத் அணிகள் மோதின. இதில், கோவா அணி, குஜராத் அணியை, 6-0 என்ற கோல் கணக்கில் வென்று, காலிறுத்திக்கு முன்னேறியது. காலிறுதியில் கோவா அணி, ஹரியான அணியை எதிர்கொள்கிறது.

ஒடிசா கோல் மழை

முன்னதாக, 'இ' பிரிவில் இடம்பெற்றுள்ள ஒடிசா, அருணாச்சல பிரதேசம் அணிகள் இடையிலான போட்டி, நடந்தது.போட்டி துவக்கம் முதலே ஒடிசா அணி வீரர்கள் கட்டுப்பாட்டிலேயே பந்து இருந்தது. அந்த அணியின் அமன்தீப், அக் ஷய் குமார், கெரோபின் ஆகியோர் தலா இரு கோல் அடித்தனர். தவிர, நீலம் சஞ்சீவ், சுதீப், லக்ரா பிரதாப் ஆகியோர் தங்கள் பங்கிற்கு, தலா ஒரு கோல் அடித்தனர்.ஆட்டத்தின் இறுதி வரை அருணாச்சல பிரதேச அணி வீரர்களால், பதில் கோல் அடிக்க இயலவில்லை. இதனால், 9- - 0 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணி அபார வெற்றி பெற்றது.இதுவரை, தான் பங்கேற்ற மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள ஒடிசா அணி, 'இ' பிரிவில் முதலிடத்தில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை