கோயம்பேடுகோயம்பேடு சந்தையில், ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின் வைக்கப்பட்ட பூச்செடிகள், போதிய பராமரிப்பின்றி கருகிய நிலையில் உள்ளன.கோயம்பேடு சந்தை வளாகத்தில் பூ, பழம் மற்றும் காய்கறி என, தனித்தனியாக சந்தை வளாகங்கள் உள்ளன. இந்த மூன்று சந்தைகளுக்கும் சேர்த்து, 20 நுழைவாயில்கள் உள்ளன.இதில், பழச் சந்தையை ஒட்டி நான்காவது நுழைவாயில் மற்றும் காய்கறி மார்க்கெட்டை ஒட்டி ஐந்தாவது நுழைவாயிலும் அமைந்துள்ளன. இவ்விரு நுழைவாயில்களும், 985 அடி நீளம் மற்றும் 72 அடி அகலம் கொண்டவை.இரு நுழைவாயிலுக்கும் இடையே உள்ள மழைநீர் வடிகாலை சிலர் ஆக்கிரமித்து, கடைகள் அமைத்து வியாபாரம் செய்ததுடன், தேவையற்ற பொருட்களை குவித்து வைத்திருந்தனர்.அதேபோல், நான்காவது நுழைவாயில் சாலையில் மழைநீர் வடிகாலை ஒட்டி, சந்தைக்கு வரும் வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன.அந்த இடத்தில் குப்பை குவிக்கப்பட்டு, சிறுநீர் கழிக்கும் இடமாகவும் மாறியிருந்தது.இதனால், இரு நுழைவாயில் சாலைகளும் குறுகலாகி, வாகன நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, கடந்த ஆறு மாதங்களுக்கு முன், அங்காடி நிர்வாக குழு அதிகாரிகள், நான்கு மற்றும் ஐந்தாவது நுழைவாயில் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்புகளையும் அகற்றினர்.மழைநீர் வடிகாலை சுற்றி வேலி அமைத்து, அதற்குள்ளே பூச்செடிகள் வைத்தனர். மேலும், மழைநீர் வடிகாலின் ஓரம் நிறுத்தப்பட்ட வாகனங்கள் அகற்றப்பட்டு, அப்பகுதி சுத்தம் செய்யப்பட்டது.இந்நிலையில், மழைநீர் வடிகால் மீது தொட்டியில் வைக்கப்பட்ட பூச்செடிகள் அனைத்தும் போதிய பராமரிப்பு இல்லாமல் கருகி, பொலிவிழந்து காட்சி அளிக்கின்றன.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, பூச்செடிகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.