பிரமாண்டமாக மாறும் பிராட்வே பஸ் நிலையம் புதிய டெண்டர் வெளியீடு
சென்னை, சென்னையில் மிகவும் பழமையான பேருந்து நிலையமாக பிராட்வே இருந்து, 500க்கும் மேற்பட்ட பேருந்துகள், 3,000க்கும் மேற்பட்ட சர்வீஸ்களாக தினமும் இயக்கப்பட்டு வருகின்றன. போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், பயணியர் அவதிப்படுகின்றனர்.இதையடுத்து, பிராட்வேயில் 650 கோடி ரூபாயில், பேருந்து நிலையம், மின்சார ரயில், மெட்ரோ ரயில் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளுடன், வணிக வளாகம் அமைக்க, அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:பிராட்வேயில் தற்போதுள்ள பேருந்து நிலையம், ஒருங்கிணைந்த முனையமாக மாற்றப்பட உள்ளது. மொத்தம், 4.42 ஏக்கர் பரப்பளவில், 10 மாடியில் ஒரு வணிக வளாகமும், பஸ் நிலையத்துடன் கூடிய எட்டு மாடி கட்டடமும் அமைய உள்ளது. அருகில் உள்ள மின்சார ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையம், மேம்பால ரயில் நிலையத்தையும் இணைக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படும். ஏற்கனவே தயாரிக்கப்பட்ட திட்டத்தில், மாநகர பஸ்கள் செல்லும் பாதைகள், நுழைவு பகுதிகள், வாகன நிறுத்தும் இடம் ஆகியவற்றில் மாற்றம் செய்துள்ளோம். பயணியர் வந்து செல்ல வசதியாக, எஸ்கலேட்டர்கள், ஸ்கைவாக், உணவகங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கும்.இந்த திட்டப் பணிகளை, 650 கோடி ரூபாயில் மேற்கொள்ள கடந்த வாரம் டெண்டர் கோரப்பட்டுள்ளது. கட்டுமான நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, மூன்று மாதங்களில் பணிகளை துவங்க உள்ளோம். வரும், 2028க்குள் அனைத்து பணிகளும் முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.