உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தந்தை ஒப்புதல் கோராமல் மகனுக்கு அறுவை சிகிச்சை செய்ய உத்தரவு

தந்தை ஒப்புதல் கோராமல் மகனுக்கு அறுவை சிகிச்சை செய்ய உத்தரவு

சென்னை, 'கைவிட்டு விட்டுச்சென்ற தந்தையின் ஒப்புதலை கோர வற்புறுத்தாமல், 13 வயது சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்' என, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ மனை நிர்வாகத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பெத்திகுப்பத்தைச் சேர்ந்தவர் கஸ்துாரி. இவருக்கும், அய்யப்பன் என்பவருக்கும், 2010ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு, ஜோஷ்வா என்ற 13 வயது மகன் உள்ளார். கடந்த 2017ல், அய்யப்பன், தன் மனைவி மற்றும் மகனை கைவிட்டு விட்டு சென்றார். மகனை, தன் சகோதரர் உதவியுடன், கஸ்துாரி வளர்த்து வருகிறார். இந்நிலையில், மகனுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதால், அவரை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய, தந்தையின் ஒப்புதல் பெற வேண்டும் எனக்கூறி, மே மாதம் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தன் கணவரின் ஒப்புதல் பெற வற்பு றுத்தாமல், மகனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய, ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகத்துக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கஸ்துாரி வழக்கு தொடர்ந்தார். இந்த மனு, நீதிபதி எம். தண்டபாணி முன் விசா ரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பி.எம்.சுபாஷ் ஆஜரானார். அரசு தரப்பில் வழக்கறிஞர் இ.சுந்தரம் ஆஜராகி, ''மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து, சிறுவனுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படும். இது தொடர்பாக, இன்று மருத்துவமனையில் நடக்கும் கூட்டத்தில் முடிவெடுக்கப் படும்,'' என்றார். இதை பதிவு செய்த நீதிபதி, சிறுவனின் தந்தையின் ஒப்புதலை வற்புறுத்தாமல், இரண்டு வாரங்களில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு உத்தரவிட்டு, மனுவை முடித்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !