பதிவேடுகளை பராமரிக்காத ஊராட்சி செயலர் சஸ்பெண்ட்
மீஞ்சூர், திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியம், நந்தியம்பாக்கம் ஊராட்சியில், கடந்த மாதம், மாவட்ட திட்ட அலுவலர்கள், ஒன்றிய அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர். ஊராட்சி நிர்வாகத்தின் பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டன.இதில், கடந்த ஆண்டு நுாறு நாள் வேலை திட்டம் தொடர்பான பதிவேடு எண் மூன்று சமர்ப்பிக்கப்படவில்லை மற்றும் பதிவேடு எண் ஒன்று, முழுமையாக பராமரிக்கப்படாமல் இருப்பது தெரிந்தது.மஹாத்மா காந்தி ஊரக வேலை திட்டப் பதிவேடுகள் பராமரிக்கும் முழுப் பொறுப்பு, அத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருக்கு உள்ளது. இதை ஊராட்சி செயலர் கண்காணிக்க வேண்டும்.பதிவேடு பராமரிப்பு, பணிகளை கண்காணிக்க தவறியதற்காக, நந்தியம்பாக்கம் ஊராட்சி செயலர் பொற்கொடி, 38, அதே ஊராட்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் அஞ்சலை, 37, ஆகிய இருவரையும், தற்காலிக பணி நீக்கம் செய்து, மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன், உத்தரவு பிறப்பித்துள்ளார்.