தாமரை குளம் ஆக்கிரமிப்பு அகற்றம்
எண்ணுார், திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட, எண்ணுார் வ.உ.சி., நகர், சத்தியவாணி முத்து நகர், காமராஜர் நகர், திருவள்ளுவர் நகர் இடையே, 5.32 ஏக்கர் பரப்பளவில் இருந்த எண்ணுார் தாமரை குளம், ஆக்கிரமிப்பில் சிக்கி, 2 ஏக்கராக சுருங்கி விட்டது. செல்வராஜ் குமார் என்பவர் தொடுத்த வழக்கில், 52 ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.அதன்படி, ஜனவரியில், இரு தவணைகளாக, 15 வீடுகள் அகற்றப்பட்டன. மீதமுள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றும் பணியில், மாநகராட்சி அதிகாரிகள், நேற்று ஈடுபட்டனர்.இதன்படி, செயற்பொறியாளர் பாபு, உதவி செயற்பொறியாளர் ஜெயகுமார் தலைமையில், ஏழு உதவி பொறியாளர்கள் உட்பட, 50க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள், மூன்று பொக்லைன் வாகனம், மூன்று லாரிகள் மற்றும் இரு பாப்கட் இயந்திரங்களை பயன்படுத்தி, ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்தனர்.இந்த நிலையில், 23 வீடுகளுக்கு பட்டா உள்ளது; இடிக்கக்கூடாது என, குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.திருவொற்றியூர் தாசில்தார் சகாயராணி, ''தாமரை குளம், சர்வே எண், 20ல் உள்ளது. அந்த சர்வே எண்ணில் உள்ள இடங்கள் அனைத்தும் குளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநகராட்சி அதிகாரிகள் கட்டடங்களை அகற்றி வருகின்றனர்; தடுப்பது சரியல்ல,'' எனக் கூறினார்.பின், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், காமராஜர் நகர், திருவள்ளுவர் நகர், சத்தியவாணி முத்து நகர் ஆகிய பகுதிகளில் உள்ள, எட்டு கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன.பதற்றமான சூழல் இருந்ததால், எண்ணுார் காவல் உதவி கமிஷனர் வீரகுமார், மணலி உதவி கமிஷனர் மகிமை வீரன் தலைமையில், 200க்கும்மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர்.மீதமுள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்கள் படிப்படியாக அகற்றப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுண்ணாம்பு குளத்தில் 3 வீடுகள் அகற்றம்
ஆவடி அடுத்த சேக்காடு, சுரங்கப்பாதை அருகே சுண்ணாம்பு குளம் உள்ளது. இங்கு, சேக்காடு ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறும் பகுதியில், கால்வாய் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில், கடந்த 30 ஆண்டுகளாக, மூன்று குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வந்தனர்.இந்நிலையில், ஆக்கிரமிப்பு அகற்ற கடந்த மூன்று மாதத்திற்கு முன் வருவாய் துறையால் 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. இதையடுத்து, வருவாய் துறையினர் நேற்று காலை 'பொக்லைன்' இயந்திரம் வாயிலாக, 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 12 சென்ட் இடத்தில் கட்டப்பட்டு இருந்த 3 வீடுகளை இடித்து அகற்றினர்.அவர்களுக்கு, ஆவடி அடுத்த பொத்துார் கிராமத்தில் தலா 3 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான பட்டா சான்றிதழ் பாதிக்கப்பட்டோரிடம் வருவாய்த் துறையால், நேற்று வழங்கப்பட்டது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க, ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், 30 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.