பரங்கிமலை சுரங்க வழியை திறக்க அமைச்சரிடம் வேண்டுகோள்
ஆலந்துார், பரங்கிமலை ரயில் நிலையம், ஆதம்பாக்கம் - ஆலந்துார் இடையே அமைந்துள்ளது. பரங்கிமலை சுரங்கப்பாதைக்கு நடுவே, பரங்கிமலை ரயில் நிலையம் செல்ல பாதை இருந்தது.அதன் அருகில் டிக்கெட் கவுன்டரும் செயல்பட்டு வந்தது. மின்சார ரயிலில் பயணம் செய்யும் பயணியருக்கு, இந்த வழித்தடம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.ஆதம்பாக்கம், ஆலந்துார் சுற்றுவட்டார பகுதிவாசிகள், ரயில் நிலையம் செல்ல இந்த வழியை பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில், தாம்பரத்தில் இருந்து பரங்கிமலை வரை நடைமேடை புதிதாக அமைக்கப்பட்டு, பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் அருகே, புதிய டிக்கெட் கவுன்டரும் அமைக்கப்பட்டது. இதனால், சுரங்கப்பாதை அருகே இருந்த ரயில் நிலைய டிக்கெட் கவுன்டர் மூடப்பட்டது.மேலும், சுரங்கப்பாதை வழியாக ரயில் நிலையத்திற்கு செல்லும் பாதையும் அடைக்கப்பட்டது. இதனால், பயணியர் தவித்து வருகின்றனர். இந்த பாதையை திறந்து விட வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து, அமைச்சர் அன்பரசன் சுரங்கப்பாதை பகுதியை, நேற்று ஆய்வு செய்தார். அவரிடம் அப்பகுதிவாசிகள் பாதையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தினர்.அப்போது, ரயில்வே உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் உறுதியளித்தார்.