பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டுகோள்
சென்னை:: ''எரிபொருளை சிக்கனப்படுத்த, மக்கள் அனைவரும் பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும்,'' என, அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். எரிபொருள் சிக்கன விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நிறைவு விழா, சென்னை மயிலாப்பூரில் நேற்று நடந்தது. இதில், தமிழக உணவு துறை அமைச்சர் சக்கரபாணி, பேசியதாவது: இந்தியாவில் வாகனங்களை அதிகமாக பயன்படுத்துவோரின் எண்ணிக்கையில், தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் மஹாராஷ்டிரா மாநிலம் உள்ளது. வீட்டிற்கு ஒரு வாகனம் இருந்த நிலை மாறி தற்போது, வீட்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் ஒரு வாகனம் உள்ளது. எனவே, எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த, பொது போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.