வார்டு ஆபீஸை கட்டி முடிக்காத நிறுவனத்திற்கு ரூ.50,000 அபராதம்
சோழிங்கநல்லுார், சோழிங்கநல்லுார் மண்டலம், 198வது வார்டு, ஓ.எம்.ஆர்., காரப்பாக்கத்தில் உள்ள வார்டு அலுவலகம், சாலை மட்டத்தை விட, 5 அடி பள்ளத்தில் உள்ளது.ஒவ்வொரு பருவ மழைக்கும் வெள்ளம் புகுந்து, மாநகராட்சிக்கு சொந்தமான பல பொருட்கள் நாசமாகின.புதிய அலுவலகம் கட்ட, 1.35 கோடி ரூபாய், கடந்த ஆண்டு மாநகராட்சி ஒதுக்கியது. ராஜ் கன்ஸ்ட்ரஷக்சன் என்ற ஒப்பந்த நிறுவனம் கட்டுமான பணியை செய்து வருகிறது.இந்த ஆண்டு, மார்ச் மாதத்திற்குள் கட்டுமான பணியை முடிக்க வேண்டும். ஆனால், 10 சதவீத பணிகள் கூட முடியவில்லை.இதனால், பழைய கட்டடத்தில் மாநகராட்சி ஊழியர்கள், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.உரிய கால அவகாசத்திற்குள் பணிகளை முடிக்காத, தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு, மாநகராட்சி 50,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.இனிமேலும் பணியை வேகமாக தொடராமல் இருந்தால், ஒப்பந்த நிறுவனத்தை கறுப்பு பட்டியலில் சேர்க்கவும், அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.