3 வயது குழந்தையை ரயிலில் இருந்து இறக்கி விட்டு சென்றோருக்கு வலை சானடோரியத்தில் அதிர்ச்சி சம்பவம்
ஆலந்துார், தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில், மூன்று வயது குழந்தையை மின்சார ரயிலில் இருந்து இறக்கி விட்டு சென்றோரை, போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில், நேற்று அதிகாலை 3 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை ஒன்று, நடைமேடை அருகே, தனியாக அழுதபடி சுற்றி வந்தது. இதை பார்த்த, பரங்கிமலை ரயில்வே போலீசார், குழந்தையை மீட்டனர். ரயில் நிலையத்தில் வந்திருந்த பயணியரிடம் குழந்தை குறித்து கேட்டபோது, குழந்தை குறித்து எவருக்கும் தெரியவில்லை. இதையடுத்து, ரயில் நிலையத்தில் உள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில், கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற ரயிலில் இருந்து ஒருவர், குழந்தையை இறக்கி விடுவது பதிவாகி இருந்தது. சானடோரியம் நிலையத்தில் இருந்து ரயில் புறப்படுவதற்கு சில வினாடிகளுக்கு முன், ரயில் பெட்டியில் இருந்த நபர் குழந்தையை நடைமேடையில் இறக்கிவிட்டு செல்லும் காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தான், குழந்தையை ரயில்வே போலீசார் மீட்டு, ஆலந்துாரில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலரிடம் ஒப்படைத்தனர். குழந்தையை யாரேனும் கடத்தி வந்து இறக்கி விட்டுச் சென்றனரா அல்லது பெற்றோரே விட்டு சென்றனரா என, ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.